குலம் காக்கும் தெய்வம்
ஸ்ரீகுத்துக்கல் மாடசுவாமி
ஸ்ரீகுத்துக்கல் மாடசுவாமி திருக்கோவில் சமூகரெங்கபுரம் -இராதாபுரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பரிவாரங்களுடன் மாடசுவாமி ஆலயங்கள் பல அமைந்துள்ளது கொலுவிருக்கும் தெய்வங்கள் பல குடும்பங்களை கட்டி காக்கும் சக்தி வாய்ந்தவை தன்னை வணங்கும் மக்களை வரமளித்து காத்து வரும் தெய்வம்....
அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் பரிவாரங்களுடன் கோவில் கொண்டுள்ளார் ...
*ஸ்ரீ அருள்மிகு குத்துக்கல் மாடசுவாமி வரலாறு*
பல நூறு வருடங்களுக்கு முன்பு திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில்திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது கொடிமரம் தேவைப்படுவதனால் மேற்கு திசையிலுள்ள காக்காச்சி மலையில் சுவாமி குறிப்பிட்ட அடையாளங்களுடைய மரத்தை பூஜை செய்து ஸ்தபதிகள் மரத்தை வெட்டி காளை வண்டி ஏற்றி வரும் வழியில் நெல்லை மாவட்டத்திலுள்ள சமுகரெங்கபுரத்தில் கீழ்புரம் அமைந்துள்ள லிங்கக்குளக்கரை வலப்பக்கமூலம் இடப்பக்கம் ஊரணி (மக்கள் குளிக்க பயன்படுத்தும் இடம்) அவ்விடம் குழுமையாக இருந்ததனால் ஓய்வு எடுப்பதற்காக வண்டிகாரர் தாவளம் (உணவு அருந்துதல்) செய்தார்...
காக்காச்சி மலையிலேயே அந்த மரத்தில் குடிகொண்டிருந்த தேவதை வண்டிகாரர் தாவளம் செய்தவுடன் அந்த சுற்றுசூழலைக் கண்டு மனமகிழ்ச்சியோடு அருகில் சுயம்பு வடிவத்தில் இருந்த குத்துக்கல்லில் ஐக்கியமானது.
அதற்கு பிறகு ஊரணியில் பெண்கள் குளித்து வீடு திரும்பும் போது குத்துக்கல்லில் அமர்ந்துள்ள அந்த தேவதை அவர்களை பின் தொடர்ந்து சென்று பல இன்னல்களை (துன்பம்) தந்தது.
அதற்கு பிறகு பெண்கள் துன்புறுவதனைக் கண்டு மனம் வருந்தி அந்த குடும்ப ஆண்வாரிசு பெரியோர்கள் என்ன குற்றம்? யாது குற்றம்? என்று கண்டறிவதற்காக கோடாங்கி குறிகாரர்களை அழைத்து வந்து பூஜை செய்து வெற்றிலையில் மை தடவி பார்க்கும் பொழுது தான் கொடிமரத்தோடு வந்த மாட தேவதை எனவும். ஊரணிக்கு அருகே உள்ள குத்துக்கல்லிலேயே ஐக்கியமானதையும் கோடாங்கி மூலமாக அந்த வம்சத்தாருக்கு தெரிவித்தது
அதன் பின்னர் மக்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கோடாங்கியிடம் கேட்கும் பொழுது நான்; சுயம்பு வடிவில் உள்ள குத்துக்கல்லிலே ஐக்கியம் ஆகிவிட்டேன். என்னுடன் 21 பந்திக்கார தேவதைகளும் என்னிடத்தில் ஐக்கியமாகி உள்ளது. அதனால் அந்த இடத்தில் எங்களை நிலையம் போட்டு கொடுத்து எங்களுக்கு வேண்டிய பூஜை, படையல், படப்புகளை செய்து வந்தால் அவர்களுக்கும் மக்களுக்கும் கேட்ட வரம் தந்து நல்லருள் புரிந்து ஆசிவழங்குவோம் என்று கூறியது தெய்வம்
அதற்கு சமுதாய மக்கள் சம்மதித்து எங்களால் இயன்ற தொண்டுகளை செய்து வழிபடுவோம் என்று மக்கள் உறுதி கூறினர், அதன்பின் பாதிக்கப்பட்ட பெண்கள் நலமானார்கள்.
தானாகவே வந்து குத்துக்கல்லிலே தங்கியதால் அவரை சுயம்பு ஸ்ரீ குத்துக்கல் மாடசுவாமி என பக்தர்கள் பக்தியுடன் வணங்கினார்கள்.
பின்பு 21 பந்திகாரர்களில் யாருக்கு எல்லாம் நிலையம் போட்டு கொடுக்க வேண்டும் என்று கோடாங்கி மூலமாக சுவாமியிடம் உத்தரவு கேட்கும் பொழுது என்னுடைய தாயாராகிய சக்தி வடிவமாகிய பேச்சிபிரம்மசக்தி மற்றும் தகப்பனாகிய சிவனணைந்தபெருமாள் ஆகிய இருவருக்கும் சைவப்படப்பும், மற்றொரு தாயாராகிய பேச்சியம்மனுக்கும், எனக்கும் என் அவதாரத்தை சார்ந்தவர்களுக்கு அசைவப்படப்பு தரவேண்டும் என உத்தரவு வந்தது. அதன்படி சமுதாய மக்கள் அவர்களுக்கு நிலையம் போட்டு கொடுத்து வணங்கி வருகிறார்கள்
குத்துக்கல் மாடசுவாமியின் மகிமையால் வணங்கும் வம்சம் பல கிளைகள் ஆக பரந்து விரிந்து மக்கள் சேர்ந்து குத்துக்கல் மாடசுவாமிக்கு கல்மண்டபம் அமைத்தார்கள். அதன் உள் மாடசுவாமியும், பேச்சியம்மனும் ஐக்கியமானார்கள்.
அதற்கு வலப்பக்கம் மண்பூடம் அமைத்து சிவனணைந்தபெருமாள் மற்றும் பேச்சிபிரம்ம சக்தியையும் மாடசுவாமிக்கு எதிரே கழுகு மாடசுவாமியையும் அமைத்து வணங்கினர்.
அப்படியாக வணங்கி வரும் நேரத்தில் தெய்வங்கள் அருள்பாவித்து கொண்டிருக்கும் வேலையில் ஒருவன் சோளத்தோட்டத்தில் சோளக்கதிர்களை திருடிக் கொண்டிருக்கும் போது பிடிபட்டான்.
அந்த நேரத்தில் கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது காவலாளிகள் அவனை பிடித்து கொண்டுவந்து சமூகரெங்கபுரம் குறண்டி (காய்ந்த கொடி செடிகள்) கட்டுகளை அவன் மீது அடுக்கி நெருப்பு வைத்தனர். அவன் தீ காயத்துடன் உருண்டு வந்து வடக்கு பக்கமாக திரும்பி பின்பு கிழக்கு பக்கமாக உருண்டு ஊரணிக்கும் குளத்திற்கும் மத்தியின் மாடசுவாமிக்கு எதிரே வந்து உயிர் துறந்தான். அவ்வாறாக இறந்த காயங்களோடு மாடசுவாமிக்கு எதிரே அந்த ஆன்ம ஆவியாக நின்றது.
அது நாளடைவில் கோடாங்கி குறிகேட்டு காயங்களுடன் நிற்கிறான் என்று அறிந்து. கோவிலுக்கு வெளியே மாடசுவாமிக்கு காவல்காரனாக நிலையம் அமைத்து கொடுக்கப்பட்டது.
அவன் மானிட பிறவியாதலால் அவனுக்கு கோவிலுக்குள் வர அனுமதி கிடையாது அதனால் அவரை கோவிலுக்கு வெளியே வைத்து வழிபட்டனர். அவர் காயங்களுடன் நின்றதால் அவர் காயக்காரன் எனப் பெயர் பெற்றார்.
அன்று முதல் கேட்ட வரம் கொடுத்து நல்லருள்புரிந்து அருள் பாவித்து கொண்டிருக்கிறார். ஸ்ரீ அருள்மிகு குத்துக்கல் மாடசுவாமி.
குலம் காக்கும் ஸ்ரீகுத்துக்கல் மாடசுவாமி போற்றி போற்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக