சனி, 27 அக்டோபர், 2018

ஸ்ரீகரையடிமாடசுவாமி திருக்கோவில் பிரான்சேரி

கவலைகள் தீர்ப்பார் கரையடி மாடசுவாமி

ஸ்ரீகரையடிமாடசுவாமி திருக்கோவில்

பிரான்சேரி

திருநெல்வேலி மாவட்டம்

நானிலம் உய்வுர ஸ்ரீ ஹரிஹர புத்திரன் பல ஆலயங்களில் தரிசனம் அருள்கிறார் அவ்வருள் முதன்மை ஸ்தலம் காரையார் சொரிமுத்துஅய்யனார் கோவில்

ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் படை தளபதி
ஸ்ரீ தளவாய் மாடசுவாமி அவரே பிரான்சேரி தலத்தில் கரையடி மாடசுவாமியாய் வீற்றிருந்து
அருள்பாலிக்கிறார்...

️ஸ்ரீ தளவாய் மாடசுவாமி

தாட்சாயிணி பார்வதி தேவியை மகளாக பெற்ற தக்க மகாராஜன் சிவனை அவமதித்ததால் வீரபத்திரரால் தலைகொய்யபடுகிறான் வெட்டுப்பட்ட தட்சனின் தலை, வேள்விக்குழியில் விழுந்து எரிந்தது. முண்டம் தரையில் விழுந்தது. தனது பதி மாண்டதை அறிந்து துடிதுடித்த தட்சனின் மனைவி தாருகாவல்லி, சிவனிடம் முறையிட்டாள். தவறை உணர்ந்து இனி நல்வாழ்வு வாழ, மீண்டும் அவருக்கு உயிர்பிச்சை இடுமாறு வேண்டினாள். அவளது அழுகுரலுக்கு இறங்கிய சிவபெருமான், வடக்கே தலை சாய்த்து உறங்கும் உயிரினத்தின் தலையை கொய்து உனது கணவனது உடலில் சேர்த்து வை, அவன் உயிர் பெற்று வருவான் என்று கூறினார். வேகம் கொண்டு எழுந்த தாருகாவல்லி, அங்கும் இங்கும் ஓடினாள், அலைந்தாள். சற்றுத் தொலைவில் கருப்புநிற ஆடு ஒன்று வடக்கே தலை சாய்த்து படுத்திருந்தது. அதன் தலையை கொய்து வந்து தனது கணவனின் உடலோடு ஒட்ட வைத்தாள். உயிர்பெற்று எழுந்தான் தட்சன். ஆட்டுத் தலையுடன் எழுந்த அவன் தனது கரங்களை கூப்பி, சிரம் தாழ்த்தி சிவனை வணங்கினான்.

மகாவிஷ்ணுவால் தாட்சாயிணி உடல்கள் சிதறுண்டு சக்தி பீடங்களாக மாறின. சிவனின் ஆங்காரமும் தணிந்திருந்த வேளை, தட்சனின் பணிவை கண்டு மனமிறங்கி, ‘‘நீயும் போற்றப்படுவாய், உன்னை வணங்கி துதிக்கும் அடியவர்களுக்கு கொல்லும் வரம், வெல்லும் வரம் அளிக்கும் பாக்யம் உனக்கு தருகிறேன். உடனே நீ பூலோகம் சென்று மகா சாஸ்தாவின் தளபதிகளில் ஒருவனாக திகழ்வாயாக,’’ என்று வரமளித்து பூலோகம் அனுப்பி வைத்தார்.தலை மாறிய சாமி என்றும் தலை மாறிய மாடன் என்றும் அழைக்கப்பட்ட அவர், பின்னர் தளவாய் மாடன் என்று அழைக்கப்பட்டார். தென்மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார், தளவாய் மாடசாமி.

வீரியபெருமாள் சாஸ்தா கோவிலில்

ஸ்ரீகரையடிமாடசுவாமி

சொரிமுத்து அய்யனார் கோவிலில் வீற்றிருந்த தளவாய் மாடன் கீழ்நாடு தேசம் போகவேண்டும் தன்னை வழி பட குலமக்கள் வேண்டும் என்று சாஸ்தாவிடம் உத்தரவுபெற்று, தேவர் படைசூழ மாடன் மாடத்தியுடன் வரும் வழியில் பல இடங்களில் நிலையம் கொண்டார்.
கல்லிடைக்குறிச்சி பத்தமடை கொழுமடை பாதையாக பிரான்சேரி வந்தடைந்தார் சுவாமி .இதனை கண்டார் பிரான்சேரி யில் வீற்றிருக்கும் வீரியபெருமாள் சாஸ்தா. தன் பரிவாரங்களுடன் கொலுவிருந்து, வரும் மக்களின் கவலைகளை தீர்த்து குல தெய்வமாய் கொலுவிருக்குமாறு சொல்ல, சுவாமி குளக்கரையில் கரையடி மாடசுவாமி யாய் கொலுவிருந்து அருள்பலிக்கிறார்

வீரியபெருமாள் சாஸ்தா கோவிலில் படைத்தளபதியாய் கரையடி மாடசுவாமி , சுவாமி சங்கிலி பூதத்தார் , பேச்சியம்மன் சுடலைமாடசாமி தூசிமாடசாமி பாதாளகண்டி கருப்பசாமி பரிவாரங்கள் புடை சூழ அருள்கிறார்கள் இங்கு பங்குனி உத்திர தினத்தில் ஆயிர கணக்கில் பக்தர் கள் குவிகிறார்கள் மாதத்தில் கடைசி சனி கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன

திருநெல்வேலியில் இருந்து பத்தமடைசெல்லும் மார்கத்தில் #பிரான்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது நம்பி கைதொழும் பக்தர் வாழ்வில் காவலாய் நின்று அருள்கிறார் ஸ்ரீ கரையடி மாடசாமி

வியாழன், 25 அக்டோபர், 2018

வென்னிமலைத்தேவர் வகையறாக்கள்

வென்னிமலைத்தேவர் வகையறாக்கள்

{ சிங்கம்பட்டி ஜமீன் மறவர் சமுதாயம்}

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கால்கரை கிராமம் இராதாபுரத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது...

கோவில்களில் ஊர்க்கோவில், குடும்பக்கோவில், சாதிக்கோவில் உறவுக்கோவில், என்று பல்வேறு வகைகளாக உள்ளது ...

ஊர்க்கோவில்களாக அம்மன் கோவில்களே விளங்குகின்றது..

கால்கரையில் ஊர் பொதுக்கோவிலாக முப்பிடாரி அம்மன் கோவில் இருக்கின்றது...

இந்த ஊரில் சுடலைமாடன் கோவில் வரிசையில் சிங்கம்பட்டி ஜமீன் வகையறாக்களுக்கு வேம்படிமாடன்,புலியூர் மாடன் ,மறுகால் சுடலை போன்ற மூன்று கோவில்கள் உள்ளன...

இதில் இராதாபுரத்தை பூர்வீகமாக கொண்ட #வென்னிமலைத்தேவர் குடும்பத்தாருக்கு இராதாபுரத்திலும் அவர்கள் குடும்பத்துக்கு சொந்தமான தோட்டக்காடுகள் கொண்ட பாப்பான்குளத்திலும் சுடலைக்கோவில்கள் உள்ளது....

வென்னிமலைத்தேவர் குடும்பத்தாருக்கு இராதாபுரத்தில் உள்ள புலிமாடசாமியே குடும்ப மாடன் ஆகும்...

புலிமாடசாமி கோவிலுக்கு திருமணம் ஆனவர்கள் வரிகொடுக்கவேண்டும் என்பது நடைமுறை...

ஆனால் முறையாக கடைபிடிக்கமுடியாமல் இருப்பதற்கு காரணம் இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்தாயிரம் குடும்பங்கள் சூழ்நிலை காரணமாக பல இடங்களில் பிரிந்து வாழ்கிறார்கள்.....

புதன், 24 அக்டோபர், 2018

கால்கரை ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி

கால்கரை ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி

சிங்கம்பட்டி ஜமீன் தேவர் சமூகத்தில் சில வகையறாக்களுக்குரியது..

அவை வேம்படி வம்சம், கன்னிமூலை வீட்டு வம்சம், வடக்கு மூலை வீட்டு வம்சம்,
சாலை வீட்டு வம்சம், என்ற வம்சங்களாகும்..

இவ்வம்சத்தார் பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு ஊர்களில் பரவியுள்ளனர்....

அவர்கள் அத்தனை பேருக்கும் இந்த கோவில் உரிமையுடையது..

இதனை இவ்வூரார் பெரியக்கோவில்{ஊரில் பெரியது} என்றும் தெற்கு கோவில் {தெற்கே இருப்பதால் என்றும் அழைக்கிறார்கள்...

#வேம்படி_மாடசாமி என்ற பெயர் இங்குள்ள வேப்ப மரத்தால் ஏற்பட்டது.....

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

வேலாண்டி தம்பிரான்

வள்ளியை மணமுடித்து முருகப்பெருமான் இங்கு அமர்ந்தக் காரணத்தினால், இந்த ஊர் ‘வள்ளியூர்’ என்றானதாக பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது. இவ்வூரில் குடவரைக் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் மிக அதிகம். இந்த முருகப்பெருமானுக்கு திருப்பணிகள் செய்து, கோவில் வெளிச் சுற்று பிரகாரத்திலேயே சமாதி அடைந்த இரண்டு சித்தர்களின் அருள், இந்த ஆலயத்திற்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நான்குநேரி அருகே உள்ள செண்பகராமபுதூரில் பிறந்தவர் வேலாண்டி சுவாமிகள். சிறு வயது முதலே முருகப்பெருமான் மீது அதிகப் பற்று கொண்டவர். அதுவும் வள்ளியூர் முருகன் மீது அலாதி பிரியம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அந்த காலத்தில் இவர் கோவிலுக்குள் நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கோவில் வெளியில் நின்றே முருகப்பெருமானைத் தரிசிப்பார்.

தன்னுடைய 13 வயதில் வள்ளியூர் முருகப்பெருமான் ஆலயத்தில் நடந்த கார்த்திகை தெப்பத் திருவிழாவுக்கு வேலாண்டி சுவாமிகள் வந்தார். அதன் பின் கோவில் வாசலிலேயே தங்கி விட்டார். பெற்றோர்கள் அவரை ஊருக்கு அழைத்தும், செல்ல மறுத்து விட்டார். முருகனுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். வேலாண்டி சுவாமிகள் தினமும் சரவணப் பொய்கையில் நீராடுவார். முருகனைச் சுற்றிக் கிரிவலம் வருவார். வடக்கு மற்றும் கீழ்வாசல் வெளியே நின்று முருகனை வணங்குவார். அதன் பின் கீழ்வாசலிலேயே நிரந்தரமாக தங்கி பரதேசிக் கோலம் பூண்டார். மக்களிடம் யாசகம் செய்து அதைக் கொண்டு முருகன் கோவிலில் திருப்பணி செய்தார்.

அந்தக் காலத்தில் சாதிப் பெயரைக் கூறி அழைப்பது சர்வ சாதாரணமாக வழக்கில் இருந்தது. எனவே மக்கள் அவரைப் பரதேசி என்று அழைத்தனர். வேலாண்டி சுவாமிக்கு அந்த பரதேசி என்ற பெயரே நிலைத்தது. மனிதர்களுக் குத்தான் சாதி, மதம் எல்லாம். இறைவன் அதற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு மனித மனங்களும், பக்தியும் தான் முக்கியம்.

இளம் துறவியான பரதேசி சித்தருக்கு, முருகப்பெருமான் அருள் சக்தியை வழங்கினார். பரதேசி சித்தர், ஒருவருக்கு விபூதி பிரசாதம் கொடுத்தால் தீராத நோய் கூட தீர்ந்து விடும். நோய் தீர்ந்த மக்கள் நெல், வாழை போன்ற விளை பொருட்களை அவருக்குக் காணிக்கையாக வழங்கினர். கருப்பட்டி, காசு என அவர் முன் கொண்டு வந்து கொட்டினர். பொருட்களைப் பணமாக்கி கோவிலுக்கு விளைநிலங்களை வாங்கினார். அழகப்பபுரம், கீக்குளம், பரதேசிபத்து, சாமியார் பத்து, தாழக்கடி, தெரிசனம் தோப்பு ஆகியக் கிராமங்களில் கோவிலுக்காக சுவாமிகள் வாங்கிய நிலங்கள் உள்ளன. கீக்குளத்தில் வீடு கட்டி பகலில் விவசாயம் செய்தார். அதில் கிடைக்கும் பொருளை கொண்டு மாலையில் முருகன் ஆலயத்தில் பணிவிடை செய்து வாழ்ந்தார்.

தான் பரதேசியாய் இருந்தாலும், சுவாமிகள் மாமன்னர் போன்று முருகனுக்கு தங்க அங்கித் தயார் செய்தார். அவருக்கு அதை அணிவித்து மகிழ்ந்தார். ஆலயத்துக்குள்ளே வராமல் அவர் கீழ் வாசலில் அமர்ந்திருப்பார். அப்போது அவரை மக்கள் வணங்கி, குழந்தைப்பேறு, வியாபாரம், தொழில்விருத்தி, நோய் நிவாரணம் ஆகியவைப் பெற்றனர். வாசலில் அமர்ந்தே தனது மனக்கண்ணால் கோவிலுக்குள் நடக்கும் அத்தனைத் திருவிழாக்களையும் காணுவார்.

ஒருநாள்.. மூலஸ்தானத்தில் தீப்பற்றி எரிகிறது என பரதேசி சித்தர் கூறவே, அனைவரும் ‘அது எப்படி மூலஸ்தானத்தில் தீப்பிடிக்கும்’ என ஆச்சரியத்துடன் கேட்டனர். உள்ளே சென்று பார்த்தால், சித்தர் சொன்னது போலவே தீ பிடிப்பதைக் கண்டனர்.

இந்த நிகழ்வுதான் பக்தர்கள் மத்தியில் அவருக்கு இருந்த சக்தியை உணர்த்தியது. அனைவரும் அவரை மகா சித்தர் என்று போற்றினர். அதன் பிறகு பரதேசி சித்தரின் திருப்பணிக்கு கூடுதலாக காணிக்கை சேர ஆரம்பித்தது.

பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வடக்கு வாசல் அருகில் பக்தி மணம் பரப்ப ஒரு மடம் ஏற்படுத்தினார். அதன் பின் கோவிலைச் சுற்றி வர கிரிவலப்பாதையை உருவாக்கினார். கோவிலுக்கு தென்புறம் காணிக்கை வாங்கிப் பாதுகாக்க காணிக்கை மடமும் அமைத்துக் கொண்டார். எல்லா வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழாக் காலங்களிலும் காணிக்கை மடத்தில் வடக்கு பார்த்து தியானத்தில் அமர்ந்து இருப்பார். அப்போது அவருக்கு முருகப்பெருமானின் திருமணக்கோல காட்சி மனக்கண்ணில் கிடைத்துக்கொண்டே இருக்குமாம்.

பரதேசி சுவாமிகள் தனது இறுதி காலத்தை அறிந்தார். குறிப்பிட்ட காலத்தில் தான் சமாதி நிலை அடைவதாகவும், தன்னை சரவணப் பொய்கையின் தென் கிழக்கு மூலையில் சமாதி வைக்கவும் மக்களிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் படி பக்தர்கள் இவருக்கு சமாதி கோவில் அமைத்தனர். அதன் பிறகு அவரது அருட்கடாட்சம் வள்ளியூரை சுற்றி மலர ஆரம்பித்தது. இந்தத் துறவியின் அருள் தொடர்வதை அனுபவித்த மக்கள் அவர் சமாதி மீது லிங்கம் பிரதிஷ்டை செய்தனர்.

சமீபத்தில் ஆன்மிக அன்பர்கள் பிரசன்னம் பார்த்தபோது, பரதேசி சித்தரின் அருள் இந்தப் பகுதியில் நிலைத்திருப்பதாகவும், மாலை நேரத்தில் ஆலயத்தில் நடமாட்டம் அல்லாமல், கோவிலைச் சுற்றிய 9 மைல் தூரத்திற்கு அவர் இருப்பதாகவும் தெரியவந்தது.

பரதேசி சித்தர் பீட மகிமை வெளிப்பட இன்னொரு காரணம், தினமும் முருகன் கோவில் மயில் ஒன்று, இவரது பீடத்திற்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் செல்வதைச் சொல்கிறார்கள். இந்த மடத்திற்கு வருபவர்கள், தங்களது பெயரைக் குறிப்பிடாமல், தங்களின் வேண்டுதலை மட்டும் ஒரு காகிதத்தில் எழுதி ஜீவ சமாதி பீடம் அல்லது காணிக்கை மடத்தில் சமர்ப்பித்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து ெரயில்களும் வள்ளியூரில் நின்று செல்கின்றன. ெரயில் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந் துள்ளது. வள்ளியூர் பஸ் நிலையத்தில் இறங் கினால் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

-சித்தர்களைத் தேடுவோம்

வேலாண்டி தம்பிரான்

பரதேசி சுவாமிகள் முருகப்பெருமானின் அருளைப் பெற்றிருந்தாலும், அவர் உயிரோடு இருக்கும் வரை, மேல்தட்டு மக்கள் அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்கவே இல்லை. அதை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார் பரதேசி சித்தர். ஆனால் அவர் ஒரு அருளாசி கூறியிருந்தார்.

அது யாதெனில், ‘வருங்காலத்தில் ஒருவன் இக்கோவிலுக்கு திருப்பணி செய்ய வருவான். அவனிடம் எல்லாம் ‘உள்ளே வராதே..’ என்று யாரும் கூற முடியாது. அவன் திறமையானவனாக விளங்குவான்’ என்று கூறியிருந்தார்.

அதுபோலவே பிற்காலத்தில் மிளகாய் சாமியார் என்கிற வேலாண்டி தம்பிரான் சுவாமிகள் அவதரித்தார்.

கொல்லம் ஆண்டு 1035 (1859)-ல் சித்திரை மாதத்தில் அசுபதி நட்சத்திரத்தில் வேலாண்டித் தம்பிரான் பிறந்தார். இவரது தந்தை சிதம்பரத் தேவர். மகனை இறைப்பக்தியுடன் வளர்த்தார். இறை நாட்டம், தந்தையின் ஊக்குவிப்பு வேலாண்டி தம்பிரானை ஆன்மிகச் சுடராய் உயர்த்தியது. பரதேசி சித்தரை போலவே 13-வது வயதிலேயே உலக வாழ்வை வெறுத்து துறவற வாழ்வில் விருப்பம் கொண்டார்.

பள்ளிப் படிப்பே அறியாத வேலாண்டி தம்பிரான் கல்விச் செல்வத்தில் சிறந்து விளங்கினார். சிறந்தக் கவியாகவும், ஞானியாகவும், யோகியாகவும் வாழ்ந்தார். பரதேசி சித்தர் தொடங்கி வைத்தப் பணியைத் தொடர்ந்து செய்தார். சுவாமிகள் 33 வருடங்கள் கோவில் தர்மக்கர்த்தாவாகப் பணியாற்றினார். அக்காலத்தில் திருக்கோவிலுக்கு பல திருப்பணிகளைச் செய்தார். திருத்தேர் உருவாக்கினார். சண்முகர் மற்றும் அம்மாளுக்கு வெள்ளி அங்கியை உருவாக்கினார். சண்முகருக்கு தனி பிரதிஷ்டை மடம் அமைத்தார். கோவிலில் கொடி மரம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். இறைவன் பிரசாதமாகத் திருநீறு வைத்து வழங்க, பன்னீர் இலைகளுக்காகப் பன்னீர் மரங்களை உருவாக்கி அதை நன்கு வளர்த்தார்.

அன்னமே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழைப்பழம், மிளகாய் வத்தல், மோர் ஆகியவற்றால் தனது பசியை போக்கிக் கொண்டார். எனவே இவரை ‘மிளகாய் வத்தல் சாமி’ என்று மக்கள் அழைத்தனர். இவர் கோபத்திலும் குணத்திலும் சிறந்தவராக விளங்கி வந்தார்.

இவர் 1966-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 10-ம் நாள், இறைவன் திருவடி நிழலில் யோக சமாதி அடைந்தார். இவரது சமாதி வெளி சுற்று பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. இவரை வழிபாடு செய்தால் நாள்பட்ட நோய்கள் நீங்கும். தீராத கடன் பிரச்சினை தீரும் என்கிறார்கள்.

சனி, 13 அக்டோபர், 2018

தளவாய் மாடசாமி வரலாறு

*தளவாய் மாடசாமி வரலாறு*

சித்தூர்,வள்ளியூர், நெல்லை.

திருநெல்வேலி மாவட்டம் சித்தூர் கிராமத்தில் மகாராஜேஷ்வரர் கோயிலில் நின்றருளும் தளவாய்மாடசாமி, தன்னை மனமுருக வேண்டும் பக்தர்களுக்கு தக்க  நேரத்தில் வந்தருள்கிறார். பிரம்மனின் மைந்தன் தட்சன் என்ற தக்கராஜன், சிவனின் மீது சினம் கொண்டிருந்தான், தனது தந்தை பிரம்மன், தாத்தா மகாவிஷ்ணு  இருவரும் சிவபெருமானின் அடிமுடி தேடி அலைந்தும் பார்க்க முடியாமல் தோல்வி அடைந்தது கேட்டு கோபம் கொண்டிருந்தான். சிவனை தனது காலில் விழ  வைக்க வேண்டும் என்ற செறுக்குடன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். தட்சனின் கடும் தவத்தை கண்டு சிவபெருமான், அவன் முன் தோன்றினார்.  அப்போது தட்சன், எனக்கு மகளாக உமாதேவி பிறக்க வேண்டும் என்று கேட்டான். சிவனும் நீ விரும்பிய படியே ஆகட்டும் என்று வரமளித்தார்.

அதன்படி உமையவள் குழந்தை ரூபமாக தாருகா வனத்தில் இருக்க, தட்சனும், அவனது மனைவி தாருகாவல்லியும், தாருகா வனத்திற்கு சென்றபோது அழகான  அந்த பெண் குழந்தையை கண்டெடுத்தனர். அந்த குழந்தைக்கு தாட்சாயினி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பருவ வயதை அடைந்ததும், சிவன்  தாட்சாயினியை மணம் முடித்தார். மகளை மணம் முடித்த மருமகனான சிவபெருமான், மாமனார் என்ற உறவில் தன்னை வணங்க வேண்டும் என்று தட்சன்  கர்வம் கொண்டான். அது நடக்கவில்லை என்பதால் சிவன் மேல் தட்சனுக்கு கோபம் அதிகரித்தது. இந்த நிலையில் சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்ற  எண்ணத்தில், மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினான் தட்சன். அதற்கு ஈரேழு லோகத்திலுள்ளவர்களுக்கும் அழைப்பை விடுத்தவன், தனது மகளை மணமுடித்த
மருமகன் என்ற உறவின் அடிப்படையில் கூட சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இதையறிந்த தாட்சாயினி, சிவனிடம் சென்று தனது தந்தையிடம் இதுகுறித்து கேட்டு வருவதாக கூறினாள்.

சிவபெருமான் தடுத்தார். செல்ல வேண்டாம், உனக்கு  உரிய மரியாதை கிடைக்காது  என்று கூறினார். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் தாட்சாயினி தனது தந்தையிடம் சென்று கேட்டாள். அதற்கு தட்சன்,  சிவபெருமானை அவமதித்து பேசியதோடு மகள் என்றும் பாராமல் தாட்சாயினியையும் அவமதித்தார்.  நடந்தவற்றை அறிந்த சிவபெருமான், தனது மேனியின்  வியர்வை துளிகளை ஒன்றாக்கி ஒரு புத்திரனை பிறக்கச்செய்தார். வியர்வையில் பிறந்த புத்திரன் வியர்வை புத்திரனாகி, வீரபுத்திரர் ஆனார். அது மருவி  வீரபத்திரரென அழைக்கப்படுகிறார். வீரபத்திரர் வேகம் கொண்டு வேள்வி சாலைகளை அழித்தார். தட்சனை வாளால் வெட்டினார். வெட்டுப்பட்ட தட்சனின் தலை,  வேள்விக்குழியில் விழுந்து எரிந்தது. முண்டம் தரையில் விழுந்தது. தனது பதி மாண்டதை அறிந்து துடிதுடித்த தட்சனின் மனைவி தாருகாவல்லி, சிவனிடம்  முறையிட்டாள். தவறை உணர்ந்து இனி நல்வாழ்வு வாழ, மீண்டும் அவருக்கு உயிர்பிச்சை இடுங்கள் என வேண்டினாள்.

அவளது அழுகுரலுக்கு இறங்கிய சிவபெருமான், வடக்கே தலை சாய்த்து உறங்கும் உயிரினத்தின் தலையை கொய்து உனது கணவனது உடலில் சேர்த்து வை,  அவன் உயிர் பெற்று வருவான் என்று கூறினார். வேகம் கொண்டு எழுந்த தாருகாவல்லி, அங்கும் இங்கும் ஓடினாள், அலைந்தாள், பதறினாள், தேடினாள். சற்று  தொலைவில் கருப்பு நிறத்தில் மாடு ஒன்று வடக்கே தலை சாய்த்து படுத்திருந்தது. அதன் தலையை கொய்து வந்து தனது கணவனின் உடலோடு ஒட்ட  வைத்தாள். உயிர்பெற்று எழுந்தான் தட்சன். மாட்டுத் தலையுடன் எழுந்த அவன் தனது கரங்களை கூப்பி, சிரம் தாழ்த்தி சிவனை வணங்கினான். (புராணத்தில்  ஆடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது). மகுட, வில்லிசை கலைஞர்கள் மாடு என்று பாடி வருகின்றனர். அதன் காரணமாக தளவாய் மாடசாமி சிலைகளை  மாட்டுத்தலையுடன் அமைத்துள்ளனர்.
(ஆகவே இங்கே மாடு என்றே குறிப்பிடுகிறேன்.)

சிவனின் ஆங்காரமும் தணிந்திருந்த வேளை, தட்சனின் பணிவை கண்டு மனமிறங்கி, நீயும் போற்றப்படுவாய், உன்னை வணங்கித் துதிக்கும் அடியவர்களுக்கு  கொல்லும் வரம், வெல்லும் வரம் அளிக்கும் பாக்யம் உனக்கு தருகிறேன். உடனே நீ பூலோகம் சென்று மகா சாஸ்தாவின் தளபதிகளில் ஒருவனாக திகழ்வாயாக  என்று வரமளித்து பூலோகம் அனுப்பி வைத்தார். தலை மாறிய சாமி என்றும் தலை மாறிய மாடன் என்றும் அழைக்கப்பட்டவர் பின்னர் அப்பெயர் மருவி
தளவாய்மாடன் என்று அழைக்கப்பட்டார். (தளவாய் என்றால் தளபதி, அமைச்சர் என்றும் பொருள் உண்டு.) சிவனின் உத்தரவிற்கிணங்க பல்வேறு வரங்களை  வாங்கி தளவாய்மாடன் பூலோகம் வருகிறார். பொதிகை மலை வந்தமர்கிறார். அங்கிருந்து மலையாள நாட்டிற்கு பேச்சியம்மை, பூதத்தார் தலைமையிலான  இருபத்தியோரு பந்தி தெய்வங்களோடு சென்றார். மாயாண்டி சுடலைமாடன், மாடன் தம்புரான் பெயரில் நிலையம் கொண்டிருந்த கொட்டாரக்கரை கடந்து  செல்கையிலே அவரும், இவர்களுக்கு தலைமையேற்று பந்தள நாடு வந்தனர்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்கு மரவேலைப்பாடுகள் செய்ய பந்தள நாட்டு எல்லையிலிருந்து மரங்கள் வெட்டி வரப்படுகிறது. அந்த மரங்களில்  சுடலைமாடன், தளவாய்மாடன், பூதத்தார், பேச்சி முதலான தெய்வங்கள் குடியமர்ந்திருந்தனர். அவர்கள் அந்த மரத்தோடு பத்மநாபபுரம் வருகின்றனர். கோயிலில்  வேலைப்பாடுகள் முடிந்து தச்சு கழித்தல் எனும் வேள்வி பூஜை நடக்கையில் இருபத்தியோரு தெய்வங்களும் வந்திருந்ததை அறிகின்றனர். அவர்களை  சாந்தப்படுத்தி அவர்களுக்கு அட்டக்குளம் கரையினில் பிலா மூடு, பலா மரம், மாமரமூடு ஆகிய இடங்களில் நிலையம் போட்டுக் கொடுத்தனர். இந்த நாளிலே  திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக யாக குண்டல பூஜைக்கு
அழைக்கப்பட்டதன்பேரில் திருவனந்தபுரத்திலிருந்து ஒன்பது போத்திமார்கள் புறப்படுகின்றனர்.
அவர்கள் வரும்போது பலா மரத்திலிருந்து வறுக்கை என்ற ஒரு வகை பலாவை(சக்கை) கொண்டு வருகின்றனர். இந்த வறுக்கை சக்கையுடன் தளவாய்மாடசாமி  வருகிறார். அவர்களுடன் இருபத்தியோரு பந்தி தெய்வங்களும் வருகின்றனர்.

மலை நாட்டு எல்லை கரமனை கடந்து நெய்யாற்றங்கரை பாதையாக நாஞ்சில் நாட்டு குழித்துறை வந்தமர்ந்து. அங்கிருந்து அந்தி சந்தை கூடும் சாமியார்மடம்  கடந்து பத்மநாபபுரம் வழியாக வேளிமலை போக்கும் விட்டு தோட்டியோடு பாதையாக களியங்காடு விட்டு, பார்வதியாள்புரமும் விட்டு வெட்டூர்ணி மடம் கடந்து  நாகர்கோவில் தான் கடந்து சுசீந்திரம் பதி வந்து தாணுமாலயனை அடி பணிந்து வழுக்கம்பாறை விட்டு கொட்டாரம் பாதை கூடியல்லோ, கன்னியாகுமரியில்  நீராடி வந்தல்லோ, பகவதியை வணங்கிவிட்டு வாரியூர் தான் கடந்து கருங்குளம் போக்குவிட்டு, வேப்பிலாங்குளம் வழியாக கும்பளம்பாடு எல்லை விட்டு  தம்பட்டிவிட்டு மடமதிலே ஒன்பது போத்திமாரும் ஓய்ந்து இருக்கும் வேளையிலே தலைமை போத்தி தானெழுந்து ஆடலானார். ஆராதனை வந்து பேசலானார்.  தளவாய்மாடன் நான் வந்திருக்கிறேன்.

எனக்கு நம்பியாற்றின் தென்கரையினிலே சித்தூர் பதியினிலே குடியிருக்கும் ராஜாவுக்கு மந்திரியாய் நானிருக்க, அங்குள்ள கன்னி மூலையிலே அஷ்ட
பந்தனம் எனக்கு செய்யவேணும். வறுக்கை நல்ல பழத்தையுமே நைவேத்தியம் வைக்கவேணும் என்றாரே. அதன் படியே ஒன்பது போத்திமாரும் சித்தூர் பதி வந்து  தளவாய்மாடனுக்கு நிலையம் இட்டனர். அவரோடு வந்த இருபத்தியோரு துணை தெய்வங்களுக்கும் நிலையம் கொடுத்தனர். இங்குள்ள தளவாய்மாடன் சைவமாக  இருக்கிறார். சுடலைக்கு தலைமை இடம் சீவலப்பேரி, பூதத்தாருக்கு தலைமை இடம் திருக்குறுங்குடி,
தளவாய்மாடனுக்கு தலைமை இடம் சித்தூராகும்.  மனமுருகி வழிபடும் அன்பர்களுக்கு தக்க நேரத்தில் வந்தருள்கிறார் தளவாய்மாடன்.