திங்கள், 23 ஏப்ரல், 2018

ஊர்க்காட்டு சுடலை ஆண்டவர்

ஊர்க்காடு, அம்பாசமுத்திரம்.
நெல்லை மாவட்டம்

அம்பாசமுத்திரத்திலிருந்து சேரன்மகாதேவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள நீர்வளமும், நிலவளமும் கொண்ட பகுதி ஊர்க்காடு ஆகும். இங்கு சேதிராயர் குல ஜமீன்தார்கள் ஆண்டு வந்தனர். இவர்கள் ஊர்க்காடு ஜமீன் என்று அழைக்கப்பட்டனர்.
தொண்டை நாட்டிற்கும், சோழநாட்டிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தை ‘‘நடுநாடு’’ (சேதிநாடு) என்று அழைத்தனர். நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் சேதிராயர் என்ற அழைக்கப்பட்டனர். சேதிராயர் என்பது சேதி + அரையர் என பிரித்து பார்த்தால் சேதி என்பது நாட்டின் பெயராகவும், அரையர் என்பது அரசர் என்று பொருள்படும்.

ஊர்க்காடு அருகேயுள்ள 18 ஊர்களையும் தன் கட்டுக்குள் வைத்து ஊர்க்காடு ஜமீன் ஆட்சி செய்து வந்தார். ஊர்க்காடு சிவன்கோயிலைக் கட்டியவர் நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலின் மூலவர் சிவன் திருக்கோட்டியப்பர் என்ற நாமத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஊர்க்காடு முந்தைய காலத்தில் பூவை மாநகர் என்று அழைக்கப்பட்டது. இது நான்கு புறமும் வயல்காடுகளால் சூழப்பட்ட பகுதி. ஊரைச்சுற்றி வயக்காடுகள் நிரம்ப இருந்ததனால் ஊர்க்காடு என்ற அழைக்கப்படலாயிற்று.
ஒரு முறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றில் வெள்ளை துணியால் மூடப்பட்ட வெண்கல செம்பு ஒன்றும் வந்தது. அவை ஊர்க்காடு பகுதியில் பலா, களியல் உள்ளிட்ட மூன்று மரங்கள் ஒருங்கே நின்ற தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஒதுங்கியது.
ஊர்க்காடு ஜமீனைச் சேர்ந்த சிற்றரசர்கள் சிவனைந்த பெருமாள் சேதுராயரும், கோட்டிலிங்க சேதுராயரும் தாமிரபரணி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் அழகுடன் வடிவமைக்கப்பட்ட பிரம்பும், உருவத்தில் பெரியதாய் அதிக மணம் கொண்டிருந்த எலுமிச்சங்கனியும் ஆற்றில் மிதந்து வந்தது. அதனைக்கண்ட அவர்கள் பிரம்பையும், எலுமிச்சங்கனியையும் எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு வருகின்றனர். பூஜை அறையில் கொண்டு வைத்தனர்.
சில வாரங்கள் கழிந்த நிலையில் ஊர்க்காடு பகுதியில் வாழும் ஆடு, மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மடிகிறது. மக்கள் நோயோடும், மழை, தண்ணி இல்லாத வறுமையோடும் அவதி பட்டனர். அவர்கள் ஜமீனிடம் வந்து முறையிட்டனர். உடனே கோட்டிலிங்க சேதுராயரும், சிவனைந்த பெருமாள் சேதுராயரும் தங்கள் குல தெய்வமான சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கோட்டியப்பர் கோயிலுக்கு வந்தனர். சந்நதி முன்னே கண்ணீர் விட்டு மன்றாடினர். ஊரில் நடக்கும் குழப்பத்துக்கு காரணம் என்ன என்பதை காட்டு என் அய்யனே, தீ வினைகள் அகலனும். தீமைகள் விலகனும். நன்மைகள் வந்து சேரனும் திருக்கோட்டியப்பனே அருளனும் என்று முறையிட்டுக் கொண்டு அரண்மனை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியெங்கும் மன்னா இங்கே பார்த்துச் செல்லுங்கள். எங்களுக்கு கண்கண்ட தெய்வம் நீங்கள் தானே, என்ன பாவம் செய்தோம் ஏன் இந்த நோய், நொடியுடன் வாழ்க்கை என்று குடிமக்கள் அழுது புலம்புவதைக்கண்டு மன்னன் வேதனையுடன் அவர்களைப் பார்த்து, எல்லாம் திருக்கோட்டியப்பன் பார்த்துக்குவான் என்று அவர் நாமத்தை கூறி சமாதானப்படுத்தி வந்தனர். அரண்மனையில் வந்தமர்ந்த சில வினாடிகளில் அரண்மனை வாயில் பண்டாரம் ஒருவர், மன்னா, கலங்காதே, வந்த வினைக்கு காரணம் என்ன என்பதை சேரன்மகாதேவியில் குறி சொல்லும் குறமகள் பார்வதியை அழைத்து வந்து கேள் என்று கூறிச் சென்றார். இவர்கள் எந்த மாலையை திருக்கோட்டியப்பருக்கு படைத்து பூஜித்தார்களோ, அந்த மாலை வாயிலில் கிடந்ததை கண்டனர். வந்து சென்றது திருக்கோட்டியப்பர் என்பதை உணர்ந்தனர். பேராணந்தம் கொண்ட ஜமீன்தார்கள் பார்வதியை தேடி சேரன்மகாதேவி சென்றனர்.
குறமகள் பார்வதியை அழைத்து வந்து கேட்டனர். அவர், மன்னாதி மன்னர்களே, பிரம்பும், கனியும் எடுத்த இடத்தின் வடபுறம் மும்மர இடுக்கில் ஒதுங்கியிருக்குது ஒரு வெண்கல செம்பு. அதை வட திசை நோக்கி நின்று உடைத்துவிடு, உண்மை தெரியும். நன்மை வந்து சேரும் என்றாள். குறி சொன்ன பார்வதிக்கு பொன்னும், பொருளும் கொடுத்து அனுப்பிய ஜமீன்தார்கள். வேகமாக பிரம்பும், கனியும் எடுத்த தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். அந்தி நேரம், பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. அது ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை. அவள் கூறிய மும்மர இடுக்கில் வெண்கல செம்பு ஒன்று கரை ஒதுங்கியிருந்ததை கண்டனர். அதை இரு கரங்கள் சேர்த்து எடுத்து வடதிசை நோக்கி நின்று உடைத்தனர். புகை மூட்டம் தென்பட்டது. சற்று நேரத்திற்கு பின் தோன்றி ஒளியின் ஊடே கேரள மரபு கொண்டை யிட்டு, கறுப்பு நிறத்தில் மணிகள் கோர்த்து கட்டிய கச்சையோடு, வல கரத்தில் வீச்சருவாவும், இட கரத்தில் கதாயுதமும் தாங்கிய வண்ணம் சுடலைமாடன் காட்சி கொடுத்தார். தனக்கு ஒரு நிலையம் கொடுத்து வணங்கி வாருங்கள். நோயும் மாறும், வறுமையும் தீரும். எல்லா வளங்களோடு குடி மக்களை வாழவைப்பேன். உங்களுக்கு துணை நிற்பேன். நாளை நடப்பதை இன்றே நினைவூட்டுவேன். அச்சம் வேண்டாம், கோட்டியப்பன் மைந்தன் நான் என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு மறைந்தார்.
அதன் பின்னர் சுடலைமாடனுக்கு ஜமீன்தார்கள் கோயில் எழுப்பி கொடை விழா எடுத்து வழிபட்டு வந்தனர். அவர்களை தொடர்ந்து அவர்களது வாரிசு மற்றும் வம்சா வழியினர் கோயிலை புதுப்பித்து வழிபாடு செய்து வருகின்றனர். சுடலைமாடனும் தன்னை அடிபணிந்து வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்புரிந்து காத்து வருகிறார்.
ஊர்க்காடு சுடலைமாடன் கோயிலில் வெற்றி விநாயகர், தங்கமயில் முருகன், அங்காளபரமேஸ்வரி, பேச்சியம்மன், பிரம்மராக்கு சக்தி, முண்டன், மாஇசக்கி ஆகிய தெய்வங்கள் நிலையம் கொண்டுள்ளன. மூலவராக சுடலைமாடன் வீற்றிருந்தாலும், முதல் பூஜை வெற்றி விநாயகருக்கு தான், அடுத்தது தங்கமயில் முருகனுக்கு, மூன்றாவதாக அங்காளபரமேஸ்வரிக்கும் அடுத்த பூஜை பேச்சியம்மனுக்கும் நடக்கிறது. அதன் பின்னரே சுடலைமாடனுக்கு பூஜை செய்யப்படுகிறது.
கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை 3 நாள் கொடை விழா சிறப்பாக நடைபெறுகிறது. கோயிலை தேவர் சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

சீவலப்பேரி சுடலை


சீவலப்பேரி, நெல்லை மாவட்டம்.

  மலையாள நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு மாயாண்டி சுடலை வந்தார். அவர் பாண்டிய நாட்டில் முதலாவது வந்தமர்ந்த இடம் சீவலப்பேரி.
திருநெல்வேலியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது சீவலப்பேரி கிராமம்.

பாண்டிய மன்னர்களின் வம்சத்தில் வந்த ஸ்ரீவல்லப பாண்டியன் மக்களின் குடிநீருக்காக ஏரியை  அமைத்தான். அவன் பேரில் அந்த ஏரி ஸ்ரீவல்லப பேரி என்று அழைக்கப்பட்டது. அது மருவி ஸ்ரீவல பேரி யாகி, சீவலப்பேரி ஆனது. இங்கு சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வந்த மாசானக்கோனார் தன்னுடைய தந்தையின் கட்டளையேற்று ஆடு மேய்க்க சென்றார். சீவலப்பேரி ஊருக்கு மேற்கு மூன்று ஒன்றாய் கலக்கும் பகுதியான முக்கூடல் என்னும் இடத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். 12 வயதே ஆன பாலகன் மாசானம். நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் கூட்டத்தை சின்னஞ்சிறு பாலகன் மாசானம், அடிக்காமலும், அதட்டாமலும் உரிமையுடன் அழைப்பது, அவற்றை கொஞ்சுவது என ஆடுகளோடு பழகுவதை கண்ட ஒரு சாமியார், அவனிடம் சென்று குழந்தாய், எனக்கு நல்ல பசியாக இருக்கிறது. உண்பதற்கு உன்னிடம் எதாவது இருந்தால் கொடு என்றார்.

காவி உடையும், காலில் ஆணிகள் பொருத்தப்பட்ட செருப்பும், கையில் திருவோடும் கொண்டு உயரமான தோற்றமும் அதற்கேற்ற அகன்ற உடல்வாகும் கொண்டு நரைத்த தாடியுடன் நிமிர்ந்த நிலையில் நின்றிருந்த அந்த சாமியாரைக் கண்டான் மாசானம். சாமி, உங்களுக்கு கொடுக்கத்தக்க கையில் ஒண்ணுமில்லே, நான் வீட்லயிருந்த கொண்டாந்த சோள கஞ்சிய இப்பதேன் குடிச்சு முடிச்சேன்.

பரவாயில்லை, ஏதாவது ஒரு ஆடுயிடம் இருந்து பாலை கறந்து கொடு, நான் குடித்து பசியாறிக்கொள்கிறேன்.
சாமி, முக்காவாசி ஆடு, சினை ஆடுதேன். ஈத்தளஞ்ச ஆடுகள்கிட்டயும் இப்ப எப்படி பால கறக்க, என்று கூறிய போது, அவர் அருகே நின்ற ஆட்டை காட்டி, இந்த ஆட்டில் இருந்து பாலை கறந்து கொடு என்றார். அந்த சாமியார்.
அப்போது மாசானம் சத்தமாக சிரித்தார். சாமி அது மலட்டு ஆடு, அதுல போய் எப்படி சாமி பால கறக்கிறது என்று கூறி, மீண்டும் சிரித்தார் மாசானம்.

இறுகிய முகத்தோடு குழந்தாய், நான் சொல்வதை நீ கேள், அந்த ஆட்டில் பால் வரும், இந்தா, இந்த திருவோட்டில் பாலை கறந்து கொடு என்று தன் கையில் இருந்த திருவோட்டினை கொடுக்க, தயக்கத்துடன் வாங்கினார் மாசானம். அந்த மலட்டு ஆட்டின் மடியில் பாலை கறக்க முயன்றார். பால் வந்தது. திருவோடு நிரம்பியது. வியந்தார் மாசானம், அந்த சாமியாரை வியப்போடு பார்த்தபடியே எழுந்தார்.
மாசானத்தின் கையிலிருந்த திருவோட்டை வாங்கி பாலை அருந்திய சாமியார், தனது சுயரூபத்தை காட்டினார். வந்திருந்தது சுடலைமாடன்.
கம்பீரமான தோற்றம், கனிவான சிரிப்பு மாசானம் உன் இடம் தேடி வந்த எனக்கு கோயில் எழுப்பி, பூஜித்து வா என்றார். அதற்கு ஐயா, வயதில் இளையவன், பருவத்தில் சிறியவன் என்னால் என்ன செய்ய முடியும்.

உன்னோடு நானிருக்கிறேன் உன்னால் முடியும் என்றார். சாமி, அப்படியே செய்கிறேன். எனது தலைமுறைக்கும் காத்து நிக்கணும், நோய் வராம பாதுகாக்கணும் என்று கூறினார். (இதை செய்யுளாக அதாவது பிறக்கும் பிறக்கும் பிள்ளைக்கும் என பாடலாய் பாடி கேட்டதாக கூறப்படுகிறது.)
உடனே சுடலைமாடன் எனக்கு கோயில் கட்டி, நான் சொல்கிற என்னோடு நிலையம் கொடுத்து பூஜித்துவா,
உன் தலைமுறையை காத்து நிற்பேன், குலம் சிறக்க வைப்பேன்,
ஊர் மக்களை காப்பேன், நோய், நொடி அண்டாமல் பாப்பேன்.

என்னை நம்பி, உன்னை தேடி வருவோருக்கு எப்பிணியாகினும் அப்பொழுதே நீக்கி வைப்பேன். என்று வாக்குறுதி கொடுத்த சுடலைமாடன் தான் நின்றிருந்த இடத்தில் கீழேயிருந்த மண்ணை எடுத்து தன் விரலை தொட்டு, அதை கொண்டு மாசானத்தின் நாவில் ஓம் என்று எழுதினார்.
மாலை பொழுதானது. ஆடுகளை கிடையில் அடைத்துக் கொண்டு தனது உறவினர்களிடமும், ஊரார்களிடமும் நடந்ததை கூறினார். மாசானம்.
எல்லோரும் கேலி பேசினர். இவரது பேச்சை பொருட்டாக நினைக்கவில்லை. சுடலைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை என்று வேதனைப்பட்ட மாசானம். அங்கிருந்து புறப்பட்டு கால்போன போக்கி பயணித்தார். சதுரகிரிமலை சென்றார். அங்கு சித்தர்கள் பலர் இருக்க, அங்கிருந்த ஒரு ரிஷி யை குருவாகக்கொண்டு அவருக்கு தொண்டுகள் செய்து வந்தார். வேதங்களை கற்றறிருந்தார்.
ரிஷியை காணவரும் அன்பர்கள் அவரை குரு என்று அழைப்பதை போன்று இவரை பாலகன் என்பதால் பாலகுரு என்று அழைத்தனர். தலைமை குருவாக இருந்த அந்த ரிஷியிடம் நாடி வரும் அன்பர்கள் தங்களுக்கு நேரும் இன்னல்களை எடுத்துக்கூறும் போது, ரிஷி பதில் கூற சிறிதுநேரம் மௌனமாக இருப்பார். பின்னர் பதில் கூறுவார். ஆனால் சுடலையின் அருளால் மாசானக்கோனார், ரிஷிக்கு முன்னதாக பதில் கூறிவிடுவார். இதனால் இவரை அங்கிருந்த முனிவர்கள் தலை இருக்க வால் ஆடலாமா என்று கண்டித்தனர். தலைமைகுரு பதில் கூறும் முன்னே, இவர் பதில் கூறியதால் வால் என்று நகைப்புக்காக கூறியதால் இவர் பெயரே வாலகுருவாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
21 வயதை எட்டிய இந்த வாலகுரு காசிக்கு பயணம் மேற்கொண்டார். தனது 24 வயதில் சொந்த ஊரான சீவலப்பேரிக்கு வந்தார். சுடலைமாடனை நோக்கி வேண்டினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய சுடலை ஈசன், நாளை காலை சூரிய உதயத்திற்கு பின் மூவாற்றங்கரையில் நான் லிங்கமாக தோன்றியிருப்பேன். என்றார். எந்த இடத்தில் சுடலை தரை மண் எடுத்து மாசானக்கோனாருக்கு நாவில் ஓம் என்று எழுதினாரோ அந்த இடத்தின் மேற்கு பக்கம், தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையோரம் சித்திரை மாதம் முதல் நாள் சுடலைமாடன் சுயம்புவாக லிங்கமாக தோன்றினார். அன்றிரவும் மாசானாக்கோனர் கனவில் தோன்றிய சுடலைமாடன். முறுக்கு மீசை முகத்தோடும், வீச்சருவா கரத்தோடும் தனது உருவத்தை காட்டினார். இதே உருவத்தில் தனக்கு சிலை வடிவம் இட்டு வணங்கி வர கூறினார். அதன்படியே சுடலைமாடனுக்கு மாசானக்கோனார் கோயில் கட்டினார். மாசானக்கோனார் நீண்ட சடைமுடியுடனும், காவி ஆடையுடனும் இருந்ததால் அவ்வூர் மக்கள் இவரை வாலகுரு சன்னியாசிக்கோனார் என்று அழைத்து வந்தனர். சன்னியாசி கோனார் சுடலைக்கு பூஜை செய்து வந்தார். அவர் சொன்ன வாக்கு பலித்தது.
ஒரு வெள்ளிக்கிழமை உச்சி கால பூஜையில் அசரீரியாக சுடலைமாடன், சன்னியாசி கோனாரிடத்தில் பேசினார்.
முன் பிறந்த முண்டனுக்கும் - அவன்
பின் பிறந்த பேச்சிக்கும் - என்னை
தில்லையில் ஆதரித்த தாயான
எல்லைக்காரி பிரம்ம சக்திக்கும்

துணையாக வழியில் வந்த
புதியவனுக்கும் எனக்கு
இணையாக என் கோட்டையில்
பூஜிக்க நிலையம் கொடு என்றார்.
அப்போது சன்னியாசிக்கோனார் கூறினார்

பணம் படைத்தவன் பலரிருக்கு
பலம் படைத்தவன் சிலரிருக்க
என்னை அழித்துவிட்டு
உன்னை அபகரித்துவிடக்கூடாதே என்றதற்கு
பிறக்கும் பிறக்கும் பிள்ளைக்கும்
கறக்கும் கன்றுக்கும் - நீ
கறந்து கொடுத்த பாலுக்கும் சத்தியமாக
சந்திரன் சூரியன் உள்ளவரை
எனது புகழ் மாறாது
உனது சந்ததி அழியாது காத்து நிப்பேன்.
என் கோட்டை படியை கழுவி
படித்துறையில் நீ இருந்தால் நான் படியளப்பேன்
நீ சொன்னது பலிக்கும்
நீ கொடுக்கும் மண்ணும் மருந்தாகும் என்றார்.
சுடலைமாடன் சொன்னபடி சன்னியாசி கோனார்
சொன்ன வாக்கு நடந்தேறியது
சுடுகாட்டு மண்ணும் மருந்தானது
சுற்று வட்டாரம் பெயரானது
சுடலையின் சக்தி உடனிருந்தது.

சன்னியாசி கோனார் மறைவுக்கு பின் அவருக்கு ஊருக்குள்ள கோயில் கட்டப்பட்டுள்ளது. அது அவர் வாழ்ந்த வீடு என்று கூறப்படுகிறது. இது போத்தி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தை மாதம் சிறப்பு வழிபாடு நடக்கிறது. சுடலைகோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாள் கொடை விழா நடக்கிறது. பங்குனி கடைசி நாளன்று போத்தி கோயிலில் பூஜை செய்து, அங்கிருந்து அவரை கோயிலுக்கு அழைத்து வருவதாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சுடலைமாடன் மாசானக்கோனாருக்கு நாவில் ஓம் எழுத மண் எடுத்த இடம். மயான பூமியானது. அங்கிருந்து தான் மண் எடுத்து வந்து கோயிலில் திருநீறாக கொடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை டிராக்டர் கொண்டு மயானகரையில் தோண்டி திருநீறு மண் அள்ளப்படுகிறது. சுமார் 600 ஆண்டுகளாக மண் அள்ளப்பட்டும் அங்கு எந்த பள்ளமும் இன்னும் ஏற்பட வில்லை, மண்ணெடுக்க தோண்டிய சில நாட்களிலேயே அந்த இடம் இயல்பாக சமப்படுத்தப்படுகிறது. எல்லாம் சுடலையின் அற்புதம் என்கிறார்கள். சீவலப்பேரி மக்கள்.
இந்த திருநீறு மண்ணை பூசினால், தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்கிறார்கள் பலன்பெற்றவர்கள். இந்த கோயிலில் மூலவர் சுடலைமாடனின் வலது புறத்தில் தாய் பேச்சியம்மனும், தாய் பிரம்மசக்தியும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். அவருக்கு எதிரே புதியசாமியும், அவருக்கு பின்புறம் முண்டன் சாமியும் அருள்பாலிக்கின்றனர்.
பனைமரங்கள் வளர்ந்திருக்கும் அடர் சோலை, தாமிரபரணி பாய்ந்தோடும் ஆற்றங்கரை அமைதி தழுவும் அற்புத சூழல் இவையாவும் ஒரு சேர கொண்ட தலத்தில் காவல் தெய்வமாய் வீச்சருவா கரத்தோடும், முறுக்கு மீசை முகத்தோடும் காத்து நிற்கிறார் சுடலைமாடன்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

நீரைக் காத்த நீராவி சுடலை

வள்ளியூர்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள அருள்மிகு ஐவராஜாக்கள் நீராவி சுடலை ஆண்டவர், சத்தியத்திற்கு கட்டுப்பட்டு குளத்து நீரை காத்து நின்றார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை தலைநகராகக்கொண்டு மன்னன் குலசேகரப்பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தான். இவர்களது தம்பிமார்கள் நான்கு பேரும் அண்ணனின் கட்டளையைஏற்று அவருக்கு உறுதுணையாக இருந்தனர். இவர்களே ஐவர் ராஜாக்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். அம்மன் அருள்வாக்குப்படி கோயில் எழுப்பி மூன்று யுகம் கண்ட அம்மன் என பெயரிட்டு வணங்கி வந்தனர். கோட்டைக்குள் குளம் வெட்டியவர்கள், வள்ளியூர் பெரிய குளத்தில் இருந்து கள்ளமடை வழியாக கோட்டை குளத்திற்கு தண்ணீரை கொண்டு வந்தனர். அந்தக் காலத்தில் குளத்திற்கு தண்ணீர் வருவதும், குளம் நிரம்புவதும், அது உடைபடாமல் இருப்பதும், வற்றாமல் இருப்பதும் தெய்வ காரியம் என்று நம்பிக்கை அதிகம் கொண்டிருந்தனர்.

அதன்படி நீர் வரத்துக்குரிய கள்ளமடைக்கு காவலும். நீர் வந்து சேரும் மடைக்கு காவலும் புரிய காவல் தெய்வம் வேண்டும் என்று குலசேகரப்பாண்டியன் தனது தளபதிகளிடத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு தளபதி, மன்னா மடைக்காவலுக்கு மட்டுமல்ல கோட்டை நடைக்காவலுக்கும் காத்து நிற்கும் தெய்வம் பூதத்தார்தான். பொதிகை மலை அடிவாரம் சாஸ்தாவின் சந்நிதானம் சொரிமுத்தைய்யன் கோயில் சென்று அய்யனாருக்கு பூஜை செய்து, பரிவார தெய்வங்களுக்கு உரிய படையலிட்டு பூதத்தாரை அழைத்து வரலாம் என்றார். உடனே மலையாள நாட்டு நம்பூதிரிகளை வரவழைத்து நாட்குறித்து ஜமீனின் ஆலோசனையோடு சொரிமுத்தைய்யன் கோயிலுக்குச் சென்றனர். பூஜைகள் நடைபெறுகிறது.

அய்யன் உத்தரவு கிடைக்கப்பெற்று மேளதாளத்தோடு பூதத்தாரை அழைக்கின்றனர். அப்போது அசரீரி கேட்கிறது. ‘‘குலசேகரப்பாண்டியா, நான் தனித்து வருவதில்லை. என்னோடு இருக்கும் இருபத்தோரு தெய்வங்களும் உடன் வருவார்கள். நாங்கள் அனுதினமும் அய்யனை காணவேண்டும். அதனால் அவரை அழைத்துச்செல், அவருடன் அழைக்காமலேயே நாங்கள் வருவோம். எங்களுக்கு பெரிய அளவில் பூஜை செய்கின்றபோது முதலில் நாங்கள் இருக்கும் இவ்விடம் வந்து இங்குள்ள தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை அவ்விடம் கொண்டு வந்து அபிஷேகம் செய்து பூஜையை தொடங்க வேண்டும்’’ என்றனர். அதன்படி ஆகட்டும் என்று பதிலுரைத்த மன்னன், சொரிமுத்தைய்யன் சந்நதியில் நின்று மன்றாடினார். அய்யனார் மனம் இறங்கி, ஒரு குடம் நீரில் உன்னுடன் வருவேன் என்று கூறினார். உடனே அர்ச்சகர் ஒருவரை கொண்டு வந்த வெள்ளி குடமதில் நீர் எடுக்கக் கூறினர். அந்தக் குடத்து நீரை வெள்ளை துணியால் மூடி வள்ளியூர் கொண்டு வருகின்றனர்.கோட்டைக்குள் கொண்டு வந்து குளத்து கரையதிலே, குடியமர்த்தி அய்யனாருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பீடம் அமைத்து வழிபட்டனர். கள்ளமடைக்கு காவலாய் கங்காள பூதத்தையும், குளத்து மடைக்கும், கோட்டை நடைக்கும் பூதத்தாரையும் காவலுக்கு வைத்தனர். குளத்தின் கரையில் சுடலை மாடனை நிலை நிறுத்தினர். அப்போது சுடலையின் பீடம் முன்பு வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து சத்தியம் செய்தபடி ‘‘ஐயா, இந்தக் குளத்தில் நீர் வற்றக்கூடாது மழையில் பெருகி, வெயிலில் ஆவியாகி வற்றும் மற்ற குளங்களைப்போல் இல்லாமல், இந்தக் குளத்து தண்ணீர் வெயில் காலங்களில் ஆவியாகி நீர் வற்றும் நிலை வராமல் காத்து நிற்க வேண்டும் அய்யனே’’ என்றனர். ‘‘சுடலை காவல் தப்பாது, கவலை வேண்டாம் நீர் ஆவியாகாது’’ என்றுரைத்தார் அசரீரியாக பேச்சி மகன் மாயாண்டி சுடலை.

ஆண்டுகள் கடந்த போதும் நீராவியாகாமல் குளம் வற்றாமல் காத்து நின்றதாலே இவ்விடத்து சுடலை, நீராவி சுடலை என்று அழைக்கப்பட்டார். ஐவராஜாக்கள் நிறுவியதால் இந்தக்கோயில் ஐவராஜாக்கள் நீராவி சுடலை ஆண்டவர் கோயில் என்று இப்போது அழைக்கப்படுகிறது. கோயிலைச்சுற்றி குடியிருப்புகள் உருவாகி விட்டன. தன்னை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து துணை நின்று காத்தருள்கிறார் நீராவி சுடலை ஆண்டவர். இக்கோயிலில் சொரி முத்தைய்யனார் அய்யனார் பெயரிலும், சங்கிலி பூதத்தார், அகத்தியர், பேச்சியம்மன், பிரம்மசக்தி அம்மன், சிவனணைந்த பெருமாள், கரடி மாடன், தளவாய்மாடன், புலமாடன், தூசிமுத்துமாடன், பலவேசக்காரன், சுடலை மாடத்தி, கசமாடன், வண்ணாரமாடன், ஈனமாடன், முண்டன், பொம்மக்கா, திம்மக்காவுடன் பட்டவராயன் ஆகிய தெய்வங்கள் அருட்பாலிக்கின்றனர்.

இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொடை விழா நடைபெறுகிறது. கொடை தோறும் குடியழைப்புக்கு பின்னர் சொரிமுத்தைய்யன் கோயில் சென்று தீர்த்தமும், அங்கிருந்து சங்கிலியும் வாங்கி வருகின்றனர். இது அய்யனாரையும், சங்கிலி பூதத்தார் மற்றும் பரிவார தெய்வங்க. தலைமலையிலிருந்து தாமிரபரணி தண்ணீரை கொண்டு வருவதாகவும் கருதுகின்றனர். இக்கோயில் வள்ளியூர் தேவர் கிழத்தெரு வில் இரயில் பாதையின் மேல் பக்கம் அமைந்துள்ளது.... #சிங்கம்பட்டி*வகையராக்கு*பாத்தியப்பட்டது*

இவண்
*ஐவராஜாக்கள்*மண்ணில்பிறந்தவன்*